பக்கங்கள் . . .

13) வாழ்க்கையின் இருதிவரைக்குமான ஒப்பந்தம்


"அவள் மென்மையானவள்."


அப்பாக்கள் செய்யும்

இரண்டாம் தவறு இது.

மென்மையை நீங்கள்

கற்பிக்கிறீர்கள்.


பெண்களின்

செருப்பைக்கூட

மெல்லியதோலில்

வடிவமைக்கிறீர்கள்.


பதினாறு

வயதுக்கு மேலும் பலூன்வாங்கி

வருகிறீர்கள்.


சில்லென்று முளைக்கும்

சிறகுகளைக்கூட வேண்டாத

ரோமங்களென்று வெட்டி

விடுகிறீர்கள்.


அதனால்தான் காற்று

கடுமையாக அடித்தாலே பல

பெண்களுக்கு ரத்தம்

கசிந்துவிடுகிறது.


ஒன்று சொல்கிறேன்

உங்களுக்கு.


என் உயிரின்

கடைசிச்சொட்டுவரை

அவள்தான் நிறைந்திருக்கிறாள்.

என்

நீண்ட பயணத்திற்குத் தகுதியாக

அவளைத் தயாரிக்கவேண்டும்.

No comments: