பக்கங்கள் . . .

5) கடல் நம் தாய்



முதல் உயிர் பிறந்தது

கடலிலா?

நம்புவதெப்படி நான்?”

கலையின் கழுத்தைக்

கட்டிக்கொண்டாள் தமிழ்.

ஒருவருக்கான காற்றை

இருவரும் சுவாசித்தார்கள்.

சுகபோதையிலும் கலைவண்ணன்

உண்மை உளறினான்.


கடலில் பிறந்த முதல் உயிர்

தண்ணீரில்தானே சுவாசித்திருக்க

முடியும்.

அந்த மரபுரிமையின்

தொடர்ச்சிதான் இன்றும்

கர்ப்பத்தில் வளரும் சிசு

தண்ணீர்க் குடத்தில்

சுவாசிக்கிறது.


ஆகா, என்று ஆச்சரியம்

காட்டிய தமிழ் அவன் முகத்தில்

முள்குத்தாத பிரதேசம்தேடி

முத்தமிட்டாள்.

அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்

பரவக்கண்டவன், அவள்

கழுத்தடியில் கைபதித்துக்

குளிரக்குளிரக் குறுமுடி

கோதினான்.


குழந்தையே.

என் குழந்தையேஎன்று

கொஞ்சினான்

புரிகிறதா?

கடல் நம் தாய்.

தாய்கண்டு தமிழ் அஞ்சலாமா?


தாயென்றால் பூமியை அவள்

ஏன் புசிக்க வேண்டும்?”


அவள் மீது குற்றமில்லை.

கடலின் கீழேநகரும் பாறைகள்

அவளை நகர்த்திவிடுகின்றன.

அவளுக்கா கருணையில்லை?

கடல் தந்த அனுமதியால்தான்

முழ்காத நிலப்பகுதி முச்சுவிட

முடிகிறது.

4) உறவுத்திரவம்


அந்த சுகம்

மீண்டும்

அவளுக்கு வேண்டியிருந்தது

அதனால்

உம் கொட்டாமலிருந்தாள்.

"தமிழ் ரோஜா "

இப்போது அவன் அழைத்தது

தோடிராகம்.

உம் என்றாள் தமிழ்.

தண்ணீருக்கு நீ பயந்தால்

உன்னைக்கண்டு நீயே

பயப்படுகிறாய் என்று

அர்த்தம்.

புரியவில்லை.

உன் உடம்பு என்பதே

முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.

உன் அழகுதேகம் என்பது 65

சதம் தண்ணீர்.

மெய்யாகவா?”

தமிழிடம்

பொய்சொல்வேனா?

விஞ்ஞானம் விளம்பக்கேள்...

வாழும் உயிர்களை

வடிவமைத்தது தண்ணீர்.

70 சதம் தண்ணீர் - யானை.

65 சதம் தண்ணீர் - மனிதன்.

என் அமுதமே.

உன் உடம்பில்

ஓடுவது 7.2 லிட்டர் உப்புத் தண்ணீர்.

நம்ப முடியவில்லை

உண்மைக்கு உலகம்வைத்த

புனைபெயர் அதுதான்.

உடம்பில் ஏன் உப்புநீர்

ஓடுகிறது?”

கடற்கொடை

தாய்தந்த சீதனம்.

முதல் உயிர் பிறந்தது

நீரில் என்பதால் ஒவ்வோர்

உடம்பிலும் இன்னும்

ஓடிக்கொண்டேயிருக்கிறது

அந்த உறவுத் திரவம்.

3) அவளின் பெயர்



அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.

சிரித்தது அவன் நுரைத்தது கடல்

தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்

கலைவண்ணன்.


வா

"மாட்டேன். எனக்கு பயம்

தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர

எல்லாம் பயம்.


வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே

விழிமுடிக் கொள்வேன்.


ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்

ததும்பும்போது என் படுக்கையில் நான்

வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன்.

என்னை

ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்

எனக்கு தண்ணீர் பயம்"


பேசப் பேச அவள்

படபடப்பைப் பறைசாற்றின

கண்களில் உடைந்துவிழுந்த

மின்மினி மின்னல்கள்.


கலைவண்ணன் கரைமீண்டான்.

அவளை

ஆதரவாய் அணைத்து

அங்கவதிரமாய்த் தோளில் அணிந்து


அவள் சுட்டுவிழி தாழும் வேளை

கன்னத்தில் சுட்டுவிரல்

கையெழுத்திட்டான்.

காதல் மண்டியிட்டான்.


காதில்

ஓதினான்.

"தமிழ் ரோஜா "

அதைவிட சுகமாக

அம்சத்வனிராகம்கூட அவள்

பெயரை உச்சரித்திருக்க

முடியாது.


காதல் அழைக்கும் போதுதான்

பெயர்வைத்ததன்

பெருமைபுரிகிறது.

2) காதலன் - காதலி








பூமியில் கிடந்துகொண்டே

இந்தக் கடல்

தூரத்துவானத்துக்குத்

தூரிகையில்லாமல் எப்படி வர்ணமடிக்கிறது

என்று யோசிக்கிறேன்.


மடியில் கிடந்தவள் நொடியில்

எழுந்தாள்.

"நீங்கள் கடல்பைத்தியம்"

இல்லை. நான் கடற்காதலன்.

"கடல் உங்களுக்குச் சலிக்கவே

சலிக்காதா?"

"காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா"

அவள் மல்லிகைக்கரம் தொட்டு

மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து

இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி

மடியில் ஊற்றிக் கொண்டான்.


ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்

பிரதேசங்களில் விளையாடி

அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி

நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்

கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.


அவன் அறிவான் - ஊடல் என்பது

பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை

வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

"அய்யோ! கடலுக்குள்ளா? நான் மாட்டேன்"

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?

"இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை"

எதனால்?

"ஆக்டோபஸ் அலைகள் என்னை அள்ளிக்

கொண்டோடிவிட்டால்?"

1) கடல் ஆரம்பம்

இங்கே வைரமுத்துவின் தண்ணீர் தேசம் எழுதப் படுகிறது. படித்து சுவையுங்கள்








கடல்

சத்தமிடும் ரகசியம்.

காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.





கடல்...

ஒருவகையில் நம்பிக்கை...
ஒருவகையில் எச்சரிக்கை.. .

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன்
மடியில்கிடந்த
தமிழ் ரோஜாவை
மறந்துபோனான்.


அவள் அழகின் நவீனம்.
சிறகு களைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை
ரத்த ஓட்டம் பாயும்
தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த
உலக அழகுகளை
நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம்.

குமரி வயதுகொண்ட
குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

"என்ன யோசனை?"
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

"இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்"